திருசெந்தூர் ஆலயம் கட்டியவர்களான ஐவரின் ஜீவ சமாதிகள் - கந்தன் திருவடி சரணம்

ஓம் சிவ சிவ ஓம் அவனின்றி ஓர் அணுவும் இல்லை

திருசெந்தூர் ஆலயம் கட்டியவர்களான ஐவரின் ஜீவ சமாதிகள்

எத்துனை பேருக்கு தெரியும் ....

திருசெந்தூர் ஆலயம் கட்டியவர்களான ஐவரின் ஜீவ சமாதிகள் இருக்குமிடம்?

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்களுள்  

1. மௌன சுவாமி

2. காசி சுவாமி 

3. ஆறுமுக சுவாமி

வெளிப்பிரகாரம் கட்டிய சித்தர் ஜீவசமாதி

4. ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி

திருக்கோவில் ராஜகோபுரம் கட்டிய சித்தர்

5. ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி. 
எனும் இந்த ஐந்து சித்தர்கள் தான்...

தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும்  நிலையில் பக்தர்களாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். 

இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்... 

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும்.

நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது  ஜீவசமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.   காந்தீச்வரம் கோவில் அர்ச்சகரிடம் கேட்டுப்பாருங்கள். முடிந்தால் அங்கே உள்ளவர்கள் ஜீவசமாதி இருக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார்கள். தரிசித்துவிட்டு வாருங்கள்.